T20 WC 2024, Super 8: சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா; ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

Updated: Mon, Jun 24 2024 21:58 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் மீதமிருக்கும் இரு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் நீடித்து வருகின்றன.  இந்நிலையில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விஸ்வரூபமெடுத்த ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாசியதுடன் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய ரிஷப் பந்த் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

ஆனாலும் தனது அதிரடியான ஆட்டத்தை கைவிடாத ரோஹித் சர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 92 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களிலும், ஷிவம் தூபே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் இப்போட்டியில் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அடிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸருடன் 9 ரன்களையும் சேர்த்து அணிகு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினாலும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை