டி20 உலகக்கோப்பை: ஃபிஞ்ச், ஸ்டொய்னிஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் சூப்பர் 12 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் - மிட்செல் மார்ஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 28 ரன்களில் மார்ஷ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் 13 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஆரோன் ஃபிஞ்ச் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
பின்னர் 68 ரன்கள் எடுத்திருந்த ஆரோன் ஃபிஞ்ச் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.