இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!

Updated: Tue, Jun 04 2024 06:35 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவடையவுள்ளது. இதனையடுத்து இந்திய அனியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியுள்ளது. மேலும் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களையும் வெளியிட்டிருந்தது. 

அதேசமயம் ராகுல் டிராவிட் தனது பதவியில் நீடிக்க விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும், அதேசமயம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பயிற்சியாளர் பதவி குறித்து ராகுல் டிராவிட் மௌனம் கலைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “நான் இந்தியாவுக்கு பயிற்சி அளித்த ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. எனவே என்னைப் பொறுத்தவரை, இது வேறுபட்டதல்ல, ஏனென்றால் நான் பொறுப்பேற்ற கடைசி தொடராக இது இருக்கும். நான் இந்திய அணிக்கு பயிற்சியளிப்பதை மிகவும் ரசித்தேன். இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையில் நான் என்னைப் பார்க்கும் நிலையைப் பார்த்தால், என்னால் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, இதுவே எனது கடைசி தொடராக இருக்கும். நான் இப்பதவியை ஏற்ற முதல் நாளிலிருந்தே, ஒவ்வொரு ஆட்டத்தையும் முக்கியமானதாக நினைத்ததைப் போலவே தற்போதும் அது மாறாமல் இருப்பதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை