இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!

Updated: Thu, Oct 20 2022 06:31 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இதில் வரும் 21ஆம் தேதியுடன் தகுதிச்சுற்று முடியும் நிலையில், 22ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி 23ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடுவதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எப்போதாவது தான் மோதும். அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

அந்தவகையில், வரும் 23ஆம் தேதி மெல்போர்னில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் இந்திய அணி வெற்றி வேட்கையுடன் உள்ளது. அதன்பின்னர் ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. கடந்த ஓராண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்றாவது முறையாக மோதும் போட்டிக்காக கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது ஒரு தகவல்.

வரும் 23ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதும் தினத்தன்று அந்த போட்டி நடக்கும் மெல்போர்னில் காலை மற்றும் மாலை இரு வேளையும் மழை பெய்வதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மழையால் இந்த போட்டியை நடத்த முடியாமல் போனால் இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ரிசர்வ் டே இல்லாததால் போட்டிக்கான புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை