ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷுப்மன் கில் 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முயிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - கிளைவ் மடாண்டே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தியான் மேயர்ஸ் அரைசதம் கடந்தார்.
ஆனாலும் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், “இந்த போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் நன்றாக இருக்கிறது, இது எங்களுக்கு ஒரு முக்கியமான விளையாட்டு, நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றோம். அதேசமயம் இன்றைய போட்டிக்கான பிட்ச்சில் பந்து நின்று பேட்டிற்கு வந்தது. இதனால் லெந்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருந்தது.
ஆனால் நாங்கள் பந்துவீசும் போது அதைத்தான் நாங்கள் எங்கள் பந்துவீச்சாளர்களுடன் விவாதித்தோம். ஏனெனில் இது போன்ற பிட்ச்சில் புதிய பந்தில் ஸ்விங் செய்வதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் பந்து பழையதாகிவிட்டால், பேட்டர்கள் ரன்களைச் சேர்ப்பது சற்று எளிதாக இருக்கும். மேலும் எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி” என்று தெரிவித்துள்ளார்.