பவர்பிளே ஓவர்களில் ஆட்டம் எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து மிரட்டிய கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும், ரியன் பராக் 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே அவர்கள் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தார்கள், அதற்கான பெருமை அவர்களுடையே பேட்டர்களைச் சாரும். நாங்கள் சிறப்பாகச் செய்திருக்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தன, ஆனால் வெளியே உட்கார்ந்து அந்த விஷயங்களைச் சொல்வது மிகவும் எளிதானது. சில வாய்ப்புகள் எங்களுக்கு சீக்கிரமே வந்தன, அவற்றைப் பிடிக்க முடியவில்லை.
ஆனால் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஒரு குழுவாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய சில பகுதிகள் உள்ளன என்று நினைக்கிறேன். ஒரு சிறிய முதுகு பிடிப்பு காரணமாக என்னால் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தில் இருக்க முடியவில்லை. அடுத்த போட்டிக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருப்பதால் அதனை பெரிதாக்க விரும்பவில்லை. முந்தைய போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகம் யோசிக்காமல் எங்களுடைய ஆட்டத்தை அப்படியே எடுத்துக்கொள்கிறோம்.
Also Read: LIVE Cricket Score
அடுத்த போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் நாங்கள் எங்களின் சொந்த மைதானத்தில் வெற்றிகளைப் பெற்றுள்ளோம், எனவே அதைத் தொடர முடியும் என்று நம்புகிறோம். வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசினால் இன்று அவருடய நாள். அவரது பேட்டிங் மற்றும் யுக்திகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது, அவர் தனது நாளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.