NZW vs SLW, 3rd T20I: மழையால் பாதித்த ஆட்டம்; சமனில் முடிந்த தொடர்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துதிருந்தான.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றி பெறும் அணியானது டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை அடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சூஸி பேட்ஸ் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய எம்மா மெக்லெத், ப்ரூக் ஹாலிடே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது அத்துடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்த நிலையில், இப்போட்டியின் முடிவும் எட்டப்படாத காரணத்தால் கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மேற்கொண்டு இத்தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தொடர்நாயகி விருதை வென்றார்.