ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகக்கோப்பை தொடரின் இறுதி கட்ட லீக் சுற்று போட்டிகள் மற்றும் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றது. இதனால் இந்த மாதத்தில் யார் சிறந்த வீரருக்கான விருதை வாங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 

Advertisement

இந்த விருதுக்கு மூன்று வீரர்களை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது. அதில் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி தனி ஆளாக இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முகமது சமி இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முகமது சமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்திய மேக்ஸ்வெலும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தார்.

Advertisement

மேலும் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டும் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருந்தார். இறுதிப்போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்றவர் யார் என்பது குறித்து ஐசிசி தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்படி டிராவிஸ் ஹெட் இந்த விருதை வென்று இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டிராவிஸ் ஹெட் அரை இறுதியில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். இதேபோன்று இறுதிப்போட்டியில் 120 பந்துகளில் 137 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் அபாரமான ஒரு கேட்சையும் பிடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய ரசிகர்களுக்கு வில்லனாக திகழ்ந்த டிராவிஸ் ஹெட், ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அதேபோல், சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த வீராங்கனைகளான நஹிதா அக்தர், பர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சாதியா இக்பால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் வங்கதேச அணியின் நஹிதா அக்தர் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News