உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இதில் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, உலகக் கோப்பை அணிகள் தங்கள் நாட்டின் பிரத்யேக ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியினை அடிடாஸ் நிறுவனம் பிரத்யேகப் பாடலுடன் இன்று வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "1983ஆம் ஆண்டு தீப்பொறியைப் பற்ற வைத்தது. 2011ம் ஆண்டு பெருமையைக் கொண்டு வந்தது. 2023ஆம் ஆண்டு கனவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், அணியின் ஜெர்சியின் டிசைன் குறித்துப் பார்த்தால், வழக்கமான நீல நிற உடையின் தோள்பட்டையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் கோடுகளைப் பதித்துள்ளனர். இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை நடத்துவதால் மூவர்ணக் கொடியை வைத்து கவுரவப் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
உலகக் கோப்பைக்கான ஜெர்சியை பாகிஸ்தான் அணி தான் முதலில் காந்த ஆகஸ்ட் மாதமே அறிவித்தது. பின்னர், நியூஸிலாந்து அணி சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, இந்திய அணி தனது அதிகாரப்பூர்வ உடையை இன்று அறிவித்துள்ளது. மற்ற அணிகளான இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து தங்களின் ஜெர்சியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.