வங்கதேச தோல்விக்கு காரணமாக அமைந்த ஐசிசி விதி; ரசிகர்கள் கண்டனம்!

Updated: Tue, Jun 11 2024 14:02 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லார் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 46 ரன்களையும், டேவிட் மில்லர் 29 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் - மஹ்முதுல்லா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற நிலையில் தாவ்ஹித் ஹிரிடோய் 37 ரன்களுக்கும், மஹ்முதுல்லா 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்த போது நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை டேனியல் பார்ட்மேன் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்து மஹ்முதுல்லாவின் தொடை பகுதியில் பட்டும் பவுண்டரிக்கு சென்றது. ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எல்பிடபிள்யூவிற்கு முறையிட நடுவரும் அவுட் என தீர்ப்பு வழங்கினார். 

 

இதனையடுத்து மஹ்முதுல்லா டிஆர்எஸ் கேட்க, மூன்றாம் நடுவரின் முடிவானது நாட் அவுட் என வழங்கப்பட்டது. ஆனால் களநடுவர் அவுட் என்ற தீர்ப்பை வழங்கியதன் காரணமாக அந்த பந்து பவுண்டரி சென்றிருந்தாலும், அதனை டாட் பந்தாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஐசிசியின் விதிமுறை குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் குரல்களை எழுப்பி வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை