விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!

Updated: Sun, Nov 05 2023 22:30 IST
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா! (Image Source: Google)

நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா நகரில் கோலாலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கலையும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஜடேஜா 5 விக்கெட்களையும், ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் கடந்த மூன்று போட்டிகளாகவே மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். சூழலுக்கு ஏற்றவாறு எங்களை தகவமைத்து விளையாடுவதாக கருதுகிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்திருந்தாலும் தேவையான ரன் குவிப்பை வழங்கினோம்.

அதன் பின்னர் பவுலர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து வெற்றியை தேடி தந்தனர். விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார். ஸ்ரேயாஸ் ஐயரின் மீது நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அவர் சரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் மீது நாங்கள் இன்னும் நம்பிக்கை வைப்போம்.

முகமது ஷமி அணிக்குள் வந்ததிலிருந்தே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். ஷுப்மன் கில்லும் நானும் மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுகிறோம். நாங்கள் இந்த ஆண்டு நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளதால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அதேபோன்று ஜடேஜா எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் மூன்று விதமான வடிவத்திலும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இன்றைய போட்டியிலும் அவர் எவ்வளவு ஒரு கிளாஸ் வீரர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். போட்டியின் இறுதி ஓவர்களில் வந்து ரன்களை குவிப்பதோடு, பந்து வீச்சிலும் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். அவருடைய பங்களிப்பு இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து அதற்கேற்றார் போல் அவர் நடந்து வருகிறார். இன்னும் இரண்டு பெரிய போட்டிகள் எதிரில் வர இருக்கின்றன. எனவே நாங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் வெற்றியை தொடர விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை