தொடர் பயிற்சியில் விராட் கோலி; வைரால் காணொலி!

Updated: Mon, Dec 19 2022 12:19 IST
Virat Kohli, KS Bharat hit nets after end of 1st Bangladesh Test to resume preparation for second ga (Image Source: Google)

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா காபாவில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா தோற்கடித்த உதவியுடன் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய இந்தியா வரும் பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரையும் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு வந்துள்ளது. முன்னதாக சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்த மூத்த வீரர் புஜாரா ஒரு வழியாக 1443 நாட்கள் கழித்து சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 1 ரன்னில் அவுட்டான நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் புஜாராவுக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர், 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் மிகப்பெரிய சரிவை சந்தித்தார்.

அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்து இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்த அவரை சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் 1020 நாட்கள் கழித்து சதமடித்து ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். அதே புத்துணர்ச்சியுடன் டி20 உலக கோப்பையிலும் அசத்திய அவர் நடைபெற்று முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரில் 1214 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 44ஆவது சதத்தை விளாசினார்.

முன்னதாக ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ள நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் இருந்து வருகிறார். அந்த வகையில் எஞ்சியிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்து முற்றுப்புள்ளி வைக்க டிசம்பர் 22ஆம் தேதியன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டி மட்டுமே கடைசி வாய்ப்பாகும்.

அதன் காரணமாக முதல் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த பின் ஓய்வெடுக்காமல் கடுமையான பயிற்சிகளை எடுத்து 2ஆவது இன்னிங்ஸில் அவுட்டாகாமல் 19 ரன்கள் குவித்த அவருக்கு சதமடிப்பதற்கான நேரம் கிடைக்கவில்லை. எனவே கடைசி வாய்ப்பாக கருதப்படும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது சதமடிக்க வேண்டும் என்பதற்காக முதல் போட்டி முடிந்த கையோடு மீண்டும் ஓய்வெடுக்காமல் சட்டோகிராம் மைதானத்தில் ஸ்பெஷல் பயிற்சிகளை எடுத்து வருகிறார். தற்போது அவர் பயிற்சி செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை