தனிப்பட்ட காரணத்தினால் மும்பை திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் குழப்பம்! 

Updated: Mon, Oct 02 2023 12:42 IST
Image Source: Google

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் டாஸ் போடப்பட்ட பின் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரம் காத்திருந்த நடுவர்கள், பின்னர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்துள்ளது.

நாளை நடக்கவுள்ள உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. இதற்காக தனி விமானத்தில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரம் வந்தனர். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த இந்திய அணி ரசிகர்கள் ஒன்றுகூடி வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

ஆனால் இந்த அணியினருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி திருவனந்தபுரம் வரவில்லை. இதற்கு காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் விராட் கோலிக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா அல்லது குடும்பத்தினரை சந்திக்க சென்றுள்ளாரா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி மும்பை திரும்பியுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்றும், இந்திய அணியினடருடன் சரியான நேரத்தில் விராட் கோலி இணைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை