மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!

Updated: Thu, Jan 25 2024 16:13 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோஸ் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும், பென் டக்கெட் 35 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்குவதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்காக களத்தில் நின்றிருந்த போது, மைதானத்திலிருந்த விராட் கோலியின் ஜெர்சியை அணிந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி களத்திற்குள் நுழைந்ததுடன் ரோஹித்ச் சர்மாவின் காலில் விழுந்து வணங்கினார்.

 

இதனைச் சற்றும் எதிர்பாராத ரோஹித் சர்மா ஒரு நிமிடம் என்ன செய்வதென தெரியாமல் நின்றார். அதன்பின் மைதான பாதுகாப்பு உழியர்கள் உடனடியாக களத்திற்கு வந்து அந்நபரை அழைத்துச்சென்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரோஹித் சர்மாவின் காலில் விழுந்த சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை