நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் மைக்கெல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். 13 வது ஓவரை வீசிய பிரேஸ்வெல்லின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 2-வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 3ஆவது பந்தில் மார்க் அதிர், 4ஆவது பந்தில் மெக்கார்த்தி, 5ஆவது பந்தில் யங் ஆகியோர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3ஆவது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரராக ஜேக்கப் ஓரம் 2ஆவது வீரராக டிம் சவுத்தியும் உள்ளனர்.