WCL 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனா.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை காரணமான மோதல்கள் வெடித்து வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நடைபெறை இருந்த காரணத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது.
அதேசமயம் சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்த போட்டியில் இரு நாட்டு வீரர்களும் விளையாடுவது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை இந்தியா சாம்பியன்ஸ் அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், யுசுப் பதான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்வதாக இத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் ரசிகர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “WCL-ல் நாங்கள் எப்போதும் கிரிக்கெட்டை நேசித்து வருகிறோம், மேலும் எங்கள் ஒரே நோக்கம் ரசிகர்களுக்கு நல்ல மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகும்.
அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைத் தொடர நினைத்தோம். ஆனால் இந்த செயல்பாடு, காரணமாக இந்திய ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதனால் இந்த போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதன் காரணமாக இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா சாம்பியன்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நார்த்தாம்ப்டனில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
Also Read: LIVE Cricket Score