நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை - ரோஹித் சர்மா!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 63ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் மும்பை அணியின் வெற்றிக்கு இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை லக்னோ அணிக்காக வீசிய மொஹ்சின் கான், வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
அதிலும், 0, 1, 1, 0, 1, 2 என அந்த ஓவரில் அவர் ரன்களை கொடுத்திருந்தார். அதுவும் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் என இருவரும் ஸ்ட்ரைக்கில் இருந்த போது இதை அவர் செய்திருந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியத் தழுவியது.
இந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம். ஆடுகளத்தை நன்றாக அறிந்துதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். 178 ரன்கள் இலக்கை எடுக்ககூடிய பிட்ச் ஆகும்.
எங்களின் தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் முடிவு சரியாக அமையவில்லை.எங்களது பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார். இதுவே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது ஆட்டம் பாராட்டுக்குறியது” என்று தெரிவித்துள்ளார்.