எங்களை விட வலுவான அணியிடம் தான் தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Sat, Mar 09 2024 15:52 IST
எங்களை விட வலுவான அணியிடம் தான் தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர்.

அதேபோல் அணியின் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது பங்கிற்கு அரைசதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்ததுடன், முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது.  பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியால் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணியில் ஜோ ரூட்டை தவிர மற்ற பேட்டர்கள் அரைசதம்  கூட அடிக்காமல் பெவிலியன் திரும்பியதால் அந்த அணி 195 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி இத்தொடரை 1-4 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்துள்ளது. 

இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “நாங்கள் எங்களைவிட சிறப்பான வலுவான அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த தொடரின் தோல்வியால் துவண்டுவிடாமல் அடுத்தடுத்த போட்டிகள் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறு சிறு தவறுகள் தான் செய்துள்ளோம், அதே போல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே உண்மை. 

நாங்கள் செய்த தவறுகள் என்ன என்பதும், தோல்விக்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்திய அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மை. ஒரு அணியாக எங்களை நாங்கள் வலுப்படுத்தி கொள்வோம். அணியின் தொடக்க வீரர்கள் ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் தொடர்ந்து அணிக்கான பார்ட்னர்ஷிப்பை அமைத்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி ஆகியோ தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஜோ ரூட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, அவர் தற்போதும் பிட்டாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.  கிரிக்கெட்டிற்காக அவரது அர்பணிப்பும், உழைப்பும் பெரியது. ஆண்டர்சனுடன் ஒன்றாக விளையாடுவது என்பது மிக சிறப்பு வாய்ந்தஒன்றாக நான் பார்க்கிறேன். நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் அவர்தான்”என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை