ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 51 ரன்களில் நவ்கிரே தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ஸ்வேதா செஹ்ராவத் 37 ரன்களையும், சினெல்லே ஹென்றி 33 ரன்களையும் சேர்த்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் கேப்டன் மெக் லெனிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் ஷஃபாலி வர்மா 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மெக் லெனிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், மரிஸான் கேப் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா, “இன்று போட்டியில் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்ததாக நினைக்கிறேன். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை. ஒருவேளை நாங்கள் 180 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் இந்த மைதானத்தில் அது வெற்றிக்கான ஸ்கோராக அமைந்திருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
இலக்கை நோக்கி விளையாடிய அவர், பவர்பிளே ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் நாங்கள் சில நல்ல ஓவர்களை வீசி அவர்களை அழுத்ததில் தள்ளினோம். ஆனால் ஃபீல்டிங்கில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் அது வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கும். மேலும் நாங்கள் இரண்டு போட்டியிலும் கடைசி பந்தில் தான் தோல்வியைத் தழுவினோம். அதனால் எங்கள் தவறுகளைத் திருத்தி, சில நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.