எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் - பென் டக்கெட்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 27 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 29 ரன்னிலும், ஜோ ரூட் 34 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் 114 ரன்னில் பென் டக்கெட்டும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹாரி புரூக் 9 ரன், பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இர்னடாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஜேமி ஸ்மித் 12 ரன்னுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், “ஆட்டத்தின் நிலை எதுவாக இருந்தாலும், எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அதனால் நாளை முதல் அமர்வு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நம்மால் முடிந்தவரை பேட் செய்து அவர்களின் மொத்த எண்ணிக்கையை நெருங்க முடிந்தால், நாங்கள் உண்மையில் இப்போட்டியில் வெற்றிபெற கூடியவர்களாக இருப்போம் என்று நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனாலும் பாகிஸ்தான் அணியும் தங்களால் முடிந்த வரை வெற்றிக்காக போராடும் என்பதனை நாங்கள் அறிவோம், அதனால் அழுத்தமானது அவர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் நாங்கள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளோம், கடந்த தொடரை 3-0 என வென்றுள்ளோம். மேலும் அவர்கள் கடினமாகப் போராடப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் எப்போதும் விளையாட்டில் இருக்கிறோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.