நாங்கள் ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தினோம் - சரித் அசலங்கா!

Updated: Fri, Feb 14 2025 20:07 IST
Image Source: Google

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மதுஷ்கா 51 ரன்களிலும், சதமடித்து அசத்திய குசால் மெண்டிஸ் 101 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இறுதியில் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சரித அசலங்கா 78 ரன்களையும், ஜனித் லியானகே 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷாட் 2, மெக்குர்க் 9, டிராவிஸ் ஹெட் 18, ஸ்டீவ் ஸ்மித் 29, ஜோஷ் இங்கிலிஸ் 29 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இலங்கை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய அசலங்கா, “வெற்றிக்கு எந்த மந்திரமும் இல்லை என்று நான் நினைக்கிறேன், அணிக்காக பெரிய சதங்களை அடிக்க விரும்புகிறேன், பின்னர் பந்து வீச்சாளர்கள் 3-4 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இன்று மைதானத்தில் குறைந்த பவுன்ஸ் இருந்தது, ஆனால் அவ்வளவு சீம் இயக்கம் இல்லை. அதனால் அவர்களும் நன்றாக பந்து வீசினர் என்று நினைக்கிறேன். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் இன்று எங்கள் நாள். நாங்கள் ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தினோம். நான் பேட்டிங் செய்யச் செல்லும்போது, ​​கேப்டன் பதவியைப் பற்றி நான் நினைக்கவில்லை, நான் வெறும் 5ஆவது பேட்டர் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. சாம்பியன்ஸ்  கோப்பை தொடரை தவறவிட்டது குறித்து நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை