பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் ராவல்பிண்டியில் பெய்த கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமாகியுள்ளது. மேலும் தற்போதுவரை மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதன் காரணமாக இப்போட்டியின் முதல் செஷனானது முற்றிலுமாக கைவிடப்பட்டதுடன், உணவு இடைவேளைக்கு பிறகு போட்டியை மீண்டும் தொடங்கும் பணிகளில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுவருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத், “எங்கள் அணியில் 20-25 வீரர்கள் உள்ளனர். முஹம்மது ஹுரைராவை சரிபார்ப்பதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு என்று நாங்கள் முதலில் உணர்ந்தோம் - கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய பிறகு அவர் பாகிஸ்தான் அணிக்கு என்ன வழங்க முடியும் என்பதனை பார்க்க விரும்புகிறோம்.
மேலும் இந்தத் தொடருக்கு முன்னதாக இமாம் உல் ஹக்கிற்கு ஓய்வு கொடுத்துள்ளோம். அதனால் தற்சமயம் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சைம் அயூப்பிற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். ஏனெனில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் தனது திறனை வெளிப்படுத்தினார்.மேலும் நாங்கள் வீரர்களை ஆதரிக்க முயற்சிப்போம். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: அப்துல்லா ஷஃபிக், சைம் அயூப், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அலி, குர்ரம் ஷஸாத்.
வங்கதேசம் உத்தேச லெவன் : மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஷஹாதத் ஹொசைன், மெஹ்தி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், காலித் அகமது.