டி20 உலக கோப்பை வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு மும்முரமாக தயாராகிவருகின்றன.

Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் மிக வலுவாக இருப்பதால், டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

Advertisement

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. அஸ்வின், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல் என ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. ஆனால் பும்ரா இல்லாததால் வேகப்பந்துவீச்சு  யூனிட் தான் பலவீனமாக உள்ளது.

பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் விளையாடவில்லை. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் அண்மையில் நடந்த போட்டிகளில் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கியிருக்கின்றனர். இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கிறார். ஆனாலும் 140-150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டல் வேகப்பந்துவீச்சு இந்திய அணியில் இல்லாதது பெரும் பின்னடைவு.

அந்தவகையில், அனுபவம் இல்லையென்றாலும் 150 கிமீ வேகத்திற்கு மேல் எளிதாக வீசக்கூடிய உம்ரான் மாலிக்கை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்திருந்தால், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அதனால் அவரை கண்டிப்பாக இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று பிரெட் லீ போன்ற சில முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்திய அணியில் அதிவேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது டி20 உலக கோப்பையில் பெரிய பின்னடைவு என்று முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம், “இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். அவர் புதிய பந்தில் நன்றாக வீசுவார். 2 பக்கமும் ஸ்விங் செய்யக்கூடியவர்.  ஆனால் ஸ்விங் இல்லாதபட்சத்தில், அவரது பவுலிங் எடுபடாது. ஏனெனில் அவரிடம் வேகம் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள், கண்டிஷனை பொறுத்தமட்டில் நல்ல வேகம் தேவை. 

அந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலிய பவுலர்கள் வேகமாக வீசுவார்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள்; ஆடுகளங்களை பற்றி நன்கறிந்தவர்கள்.  இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அருமையாக உள்ளது. ஆனால் பும்ராவுக்கு மாற்று வீரர் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News