மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை பந்தாடி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு சீசன் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு சஸ்கியா ஹார்லீ மற்றும் சாரா பிரைஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 38 ரன்களைச் சேர்த்த நிலையில் சஸ்கியா ஹார்லி 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை சாரா பிரைஸும் 27 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் மறுபக்கம் விளையாடிய ஐல்சா லிஸ்டர் 11 ரன்களுக்கும், லோர்னா ஜேக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேத்ரின் பிரைஸ் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறிய நிலையில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கைவர், லாரன் பெல், சார்லீ டீன் மற்றும் டேனியல் கிப்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு மையா பௌச்சர் மற்றும் டேனியல் வையட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மையா பௌச்சர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவரைத் தொடர்ந்து டேனியல் வையட்டும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மையா பௌச்சர் 12 பவுண்டரிகளுடன் 62 ரன்களையும், டேனியல் வையட் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் சேர்த்து அசத்திய நிலையில், இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியுள்ளதுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மையா பௌச்சர் ஆட்டநாயகி விருதை வென்றார்.