மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: டேனியல் வையட், நாட் ஸ்கைவர் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 31 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்னேக் போஷ் எதிரணி பந்துவீச்சை விளையாட முடியாமல் தொடர்ந்து தடுமாறியதுடன் 26 பந்துகளை எதிர்கொண்டு அதில் ஒரு பவுண்டரி உள்பட 18 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் லாரா வோல்வார்ட் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சோலே ட்ரையான் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மரிஸான் கேப்பும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய அன்னரி டெர்க்சன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் 20 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களைச் சேர்த்து. இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளையும், லின்ஸி ஸ்மித், சார்லோட் டீன், சாரா கிளென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மையா பௌச்சர் - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டேனியல் வையட் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மற்றொரு தொடக்க வீராங்கனையான மையா பௌச்சர் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் தனது பங்கிற்கு 19 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணி 50 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் டேனியல் வையட்டுடன் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் வையட் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 48 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி எக்லெஸ்டோன் ஆட்டநாயகி விருதை வென்றார்.