மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

Updated: Sat, Feb 11 2023 10:09 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 26 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடக்கிறது. 10 அணியும் குரூப் ஏ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும்.

இதில், நேற்று நடந்த முதல் போட்டியில் தொடரை நடடத்தும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை மகளிர் அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து மட்டும் நிதானமாக நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து மிகவும், எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பல் தான் மிஞ்சியது. ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. மாறாக, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இதையடுத்து, இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை