WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Fri, Feb 23 2024 23:25 IST
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று(பிப்.23) கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா வெறும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மெக் லெனிங்குடன் இணைந்த் அலிஸ் கேப்ஸி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லெனிங் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அலிஸ் கேப்ஸி - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசித்தள்ளினர்.

இதில் அலிஸ் கேப்ஸி தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அலிஸ் கேப்ஸி 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய மரிஸான் கேப்பும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.  இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரங்கனை ஹீலி மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்மளித்தார். அதன்பின் இணைந்த யஷ்திகா பாட்டியா - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நாட் ஸ்கைவர் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய யஷ்திகா அரைசதம் கடந்தார். 

அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 57 ரன்களை சேர்த்திருந்த யஷ்திகா பாட்டியா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் தனது பங்கிற்கு 24 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் மும்பை அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இருப்பினும் களத்தில் இருந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்ததுடன், அணிக்கு வெற்றியைத் தேடித்தர கடுமையாக போராடினார். ஆனால் கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்தை சிக்சருக்கு அடிக்க நினைத்த ஹர்ன்மன்ப்ரீத் கவுர் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய சஜானா கடைசி பந்தில் சிக்சர் அடித்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தித்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை