WPL 2025: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 180 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் மற்றும் அமெலியா கெர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெலியா கெர் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மேத்யூஸுடன் இணைந்த நாட் ஸ்கைவர் பிரன்ட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஹீலி மேத்யூஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்கள் எடுத்திருந்த ஹீலி மேத்யூஸ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்திருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமன்ஜோத் கவுர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மறுபக்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் அமஞ்ஜோத் கவுர் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்களைச் சேர்த்த கையோடு ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷ்திகா பாட்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்களையும், சஜீவன் சாஜனா 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், தனுஜா கன்வர், காஷ்வீ கௌதம், பிரியா மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.