WPL 2025: யுபி வாரியர்ஸை 143 ரன்களில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரன் நவ்கிரே மற்றும் விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய கிரன் நவ்கிரே 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடகக் வீராங்கனையான விருந்தா தினேஷும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த உமா சேத்ரி மற்றும் கேப்டன் தீப்தி சர்மா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உமா சேத்ரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் தஹ்லியா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றியும், கிரேஸ் ஹாரிஸ் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தீப்தி ஷர்மாவும் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஸ்வேதா செஹ்ராவத் 18 ரன்களிலும், சோஃபி எக்லெஸ்டோன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் அதிரடியாக விளையாடிய அலானா கிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடியா சைமா தாக்கூர் மூன்று பவுண்டரிகளுடன் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைக் குவித்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் மற்றும் டியாண்டிரா டோட்டின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.