WPL 2025: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஹீலி மேத்யூஸுடன் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களை எடுத்த கையோடு நாட் ஸ்கைவர் பிரன்ட்டும் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மேற்கொண்டு இறுதிவரை களத்தில் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.