WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விருந்தா தினேஷ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்திருந்த கிரண் நவ்கிரேவும் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தீப்தி சர்மா - தஹ்லியா மெக்ராத் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தீப்தி சர்மா 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்வேதா செஹ்ராவத் 11 ரன்களுக்கும், கிரேஸ் ஹாரிஸ் 2 ரன்களுக்கும், உமே சேத்ரி 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் நிதானமாக விளையாடி வந்த தஹ்லியா மெக்ராத்தும் 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 109 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய சினெல்லே ஹென்றி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சினெல்லே ஹென்றி 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 2 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 12 ரன்களை எடுத்த கையோடு சோஃபி எக்லெஸ்டோனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனசன் 4 விக்கெட்டுகளையும், மரிஸான் கேப், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக் லெனிங் 5 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஷஃபாலிவுடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் ஷஃபாலி வர்மா 24 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மரிஸான் கேப் 9 ரன்களுக்கும், அனபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனசன் ஆகியோர் தலா 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார். இதற்கிடையில் அபாரமாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் நிக்கி பிரசாத் 18, ஷிகா பாண்டே 15 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்றவர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களில் ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் தரப்பில் கிராந்தி கவுட் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.