WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது ஆர்சிபி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஜார்ஜியா வோல் இணைதொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்த கிரண் நவ்கிரேவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதன்மூலம் இவர்களில் பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்த நிலையில், 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்த கையோடு கிரண் நவ்கிரேவும் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சினெல்லே ஹென்றி 19 ரன்களையும், சோஃபி எக்லெஸ்டோன் 13 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா வோல் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்து.
ஆனால் இப்போட்டியில் அவர் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 99 ரன்களை எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் தீப்தி சர்மா ரன் அவுட்டாகிட சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். இதன் காரணமாக யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களைக் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளையும், சார்லெட் டீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்க சிறப்பானதாக இல்லை.
ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக தொடங்கிய சபினேனி மேக்னா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 28 ரன்னிலும், ராகவி பிஸ்ட் 14 ரன்னிலும், கனிகா அஹுஜா 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 107 ரன்களுக்குள்ளேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரிச்சா கோஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணிக்கு நம்பிக்கயளித்த நிலையில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 69 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து ஜார்ஜியா வெர்ஹாம் 17 ரன்களுக்கும், சார்லோட் டீன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்நே ரானா அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி 6 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் ஆர்சிபி அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் வெற்றிபெற 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற, ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களில் ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன், கேப்டன் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.