இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடமும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்மித் தனது சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் அலெக்ஸ் கேரி தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டினையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இந்திய ரசிக்கர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ரோஹித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களை எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சட்டேஷ்வர் புஜரா - விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் புஜாரா 3 ரன்களுடனும், விராட் கோலி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.