டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை - யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அதன்பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காதாலும், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் டி10, இந்தியா லெஜண்ட்ஸ் ஆகிய அணிகளில் தற்போது அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், தான் விளையாடும் சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என யுவராஜ் சிங் வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங்,“கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் நான் அணியின் 12ஆவது வீரராக மட்டுமே இருந்தேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 3 சதங்கள், 11 அரை சதங்கள் அடித்து 33.92 சராசரியுடன் 1900 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.