இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 135 ரன்களைக் குவித்ததுடன், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய் அபிஷேக் சர்மா, “என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் எப்போதும் என்னிடம் 15 முதல் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனை நான் செயல்படுத்த முயற்சித்து வருகிறேன். மேலும் இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ். ஏனெனில் நாட்டிற்காக விளையாடி சதமடிப்பது என்பது எப்போதுமே ஒரு சிறந்த உணர்வு.
இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இது எனது நாள் என்று நான் பார்க்கும்போது, முதல் பந்திலிருந்தே நான் எப்போதும் செல்ல முயற்சிப்பேன். முதல் நாளிலிருந்தே பயிற்சியாளரும் கேப்டனும் என்னை நடத்திய விதம், அவர்கள் எப்போதும் இந்த நோக்கத்தை விரும்பினர், எப்போதும் என்னை ஆதரித்தனர் - அது எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. அதனால் நான் எனது ஷாட்களை விளையாடவும் விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் அபிஷேக் சர்மாவின் இந்த இன்னிங்ஸ் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது எக்ஸ் பதிவில், “அபிஷேக் சர்மா அருமையா விளையாடினார். அவரிடமிருந்து இதைதான் நான் எதிர்பார்த்தேன். உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.