
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ரானா இடம்பிடித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் பிலிப் சால்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பட்லரும் அரைசதம் கடந்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி தற்போது வரை 170 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ரானா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி அவர் தனது மூன்றாவது ஓவரில் 26 ரன்களைக் கொடுத்து, அறிமுக ஆட்டத்தில் ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளார்.