ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அபிஷேக் சர்மா 29 ரன்களையும், ரிங்கு சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ஹர்திக் பாண்டியா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் தலா 53 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த பில் சால்ட் 23 ரன்னிலும், பென் டக்கெட் 39 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் 25 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதால் 19.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியில் அரைசதம் கடந்த ஷிவம் தூபே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “மைதானத்தில் உள்ள அனைவரின் சிறந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. மேலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பெரிய கூட்டம் எப்போதும் எங்களுக்குப் பின்னால் இருந்ததுடன் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இப்போட்டியில் 12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும்.
ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு சற்று பின்னடைவாக இருந்தது. ஆனால் அதன்பின் இணைந்த ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே இருவரும் பேட்டிங் செய்த விதம், அவர்கள் பதிலளித்த விதம், நடுவில் அவர்கள் காட்டிய நேர்மறையான நோக்கம் மற்றும் அவர்களின் அனுபவத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. மேலும் வலைகளில் நீங்கள் பேட்டிங் செய்வது போலவே களத்திலும் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
Also Read: Funding To Save Test Cricket
பவர்பிளேவுக்குப் பிறகு, நாங்கள் ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. அச்சமயத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தைக் கட்டுப்படுத்தினோம். மேலும் 10 ஓவர்களுக்கு பிறகு ஷிவம் தூபேவால் களத்திற்குள் வரமுடியாத சூழல் உருவானதால் மற்று வீரராக ஹர்ஷித் ரானா எங்களுக்கு கிடைத்தார். அவர் சிறப்பாக பந்துவீசியதுடன் எங்களுக்கு இந்த வெற்றியை உறுதிசெய்தார். அது நம்பமுடியாததாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now