
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்கும் வாய்ப்புகளைக் குறைத்ததுடன், தேவைப்படும் பந்துகளில் மட்டும் பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் மற்றும் ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.