
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் நிதீஷ் ரெட்டி சதமடித்தும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆரைசதம் அடித்தும் அசத்தியன் காரணமாக 369 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 114 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் இதில் சாம் கொன்ஸ்டாஸ் 8 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 20 ரன்களிலும் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 13 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னிலும், மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், அலெக்ஸ் கேரி 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.