
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். மேற்கொண்டு நிதீஷ் ரெட்டி சதத்தை நோக்கியும், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தை நோக்கி விளையாடி வருகின்றனர். இந்நிலியில் இப்போட்டியில் ரிஷப் பந்தின் ஷாட் தேர்வு குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.