
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31-ம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டம் போல், சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதபாத், கொல்கத்தா உள்ளிட்ட எல்லா முக்கிய நகரங்களிலும் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் அவருக்கு முழு திருவுருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கள் தனது 50ஆவது பிறந்த நாளை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.
இதனால் அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் ஐபிஎல் போட்டியின் போது இந்த சிலையை திறக்கவுள்ளனர் மும்பை கிரிக்கெட் சங்கத்தினர். ஒருவேளை சிலை நிறுவும் பணி ஐபிஎல் போட்டிக்குள் முடியவில்லையெனில், அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின் போது இந்த விழா நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.