BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து டி20 போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது டி20 போட்டி தாக்காவில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 25 ரன்கள் அடித்தார். பென் டக்கெட் 28 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே அதைவிட மோசமாக ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மெஹிடி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், ரோனி தலுக்தர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹ்ரிதி, மெஹிதி ஹசன் ஆகியோரும் கணிசமான ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருமுனையில் சீரான இடைவெளியில் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் விளையாடிய நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 46 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். இதன்மூலம் 19ஆவது ஓவரில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
Win Big, Make Your Cricket Tales Now