
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்வதில் மிகதீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் தயாரிப்பு நிலையில்தான் எல்லாமே இருக்கிறது என்பது வருத்தமான ஒன்று. உலகக் கோப்பை நெருங்குவதற்கு கொஞ்சம் முன்பாகவே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடக்கூடிய வீரர்களாக இருந்த மிக முக்கியமான வீரர்கள் சிலர் திடீரென எதிர்பாராத காயத்தில் சிக்கியது இந்திய அணி நிர்வாகத்தின் உலகக் கோப்பை தயாரிப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது.
இதன் காரணமாக உலகக் கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி ஆட்டத்தில் கூட பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது. இந்திய அணிக்கான ஒருநாள் கிரிக்கெட்டின் தற்போதைய முதன்மை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வருவாரா? நான்காவது இடத்துக்கான பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து திரும்பி வருவாரா? என்கின்ற கேள்விகள் பெரிய பின்னடைவுகளை தந்து கொண்டிருக்கிறது.
இந்த இடங்களுக்கு வீரர்களை கண்டறிவதற்காக தற்பொழுது இந்திய அணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது. எனவே பரிசோதனைக்கான வீரர்களுக்கு வாய்ப்புகள் தர வேண்டியது முக்கியமான கடமையாக இருக்கிறது. இதனால் ஒரு உறுதியான முடிவுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் வர முடியவில்லை.