
ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்தப் போட்டியிலும் வழக்கமாக இரண்டாவதாக சேசிங் செய்த ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். பின்னர் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்களை குவித்தாலும் அதனை சேசிங் செய்த ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற மிட்செல் மார்ஷ் இறுதிவரை களத்தில் நின்று 50 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்கள் என 77 ரன்கள் குவித்து அமர்களப்படுத்தினார். அவரோடு இணைந்த மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய அணி ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி டி20 சாம்பியனாகவும் முதல்முறை மகுடம் சூடியது.