
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது நார்த்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லையன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதமடித்தும், துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜூரெல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 15 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுலும் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து லையன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங்க் மற்றும் ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லையன்ஸ் அணியில் மெக்கின்னி 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹைன்ஸுடன் ஜோடி சேர்ந்த எமிலியோ கே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதங்களையும் பூர்த்தி செய்த்னர். பின்னர் ஹைன்ஸ் 54 ரன்களுக்கும், எமிலியோ கே 71 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனல் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து லையன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து லையன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.