
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4ஆவது லீக் போட்டியானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக குவிண்டன் டி காக், வாண்டர் டுசைன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் சதமடித்து அசித்திருந்தனர்.இலங்கை அணி சார்பாக தில்சன் மதுஷங்கா இரண்டு விக்கெட்டையும், பதிரானா, ரஜிதா, வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியனர்.
பின்னர் 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக குசால் மென்டிஸ் 76 ரன்களையும், சரித் அசலங்கா 79 ரன்களையும், தசுன் ஷானகா 68 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.