1-mdl.jpg)
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 3ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. இத்தனைக்கும் கத்துக்குட்டியாகவே பார்க்கப்படும் அந்த அணி உண்மையாகவே ஆரம்பத்தில் இந்த 4 வெற்றிகளை பெறும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.
ஆனாலும் டெல்லியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அசால்டாக ஆஃப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக பதிவு செய்த ஆஃப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் 14 தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தி வெற்றி வாகை சூடியது. அதே வேகத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாகிஸ்தானையும் பந்தாடிய ஆஃப்கானிஸ்தான் 7 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து மாபெரும் சரித்திரம் படைத்தது.
அதைத்தொடர்ந்து 1996 உலக சாம்பியன் இலங்கையையும் தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது நெதர்லாந்தையும் வீழ்த்தி மொத்தம் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் தங்களுடைய அடுத்த 2 போட்டிகளில் வென்றால் அரையிறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு ஆஃப்கானிஸ்தானுக்கு பிரகாசமாகியுள்ளது.