
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி, ஐக்கிய அரபி அமீரக அணியின் முகமது வசீம் மற்றும் நமீபியா அணியின் எராஸ்மஸ் ஆகியோரு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
அதேபோல் நமீபியா அணியின் எராஸ்மஸ் ஓமன் அணிக்கு எதிரான டி20 தொடரில் 8 விக்கெட்டுகளையும், 145 ரன்களையும் சேர்த்ததுடன் தொடரை கைப்பற்றவும் முக்கிய காரணமாக அமைந்தார். இத்தொடரில் அபாரமாக விளையாடிய எராஸ்மஸ் இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். மேலும் யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம் ஏசிசி பிரீமியர் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் இப்பட்டியலில் இணைந்துள்ளார்.