
கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அதிலும் உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் கேட்கவே வேண்டாம்.
அப்படி ஒருபோட்டியில் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவிக்க, 260 ரன்களை எடுத்தது. இலக்கை விரட்டிய பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
29 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து 28 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உடற்தகுதியில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் அப்போட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்தியாவை தோற்கடித்திருக்க முடியும் என்று தற்போது கூறியுள்ளார் அக்தர் .