
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இதையடுத்து இந்தத் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணி மீண்டெழுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பரிந்துரைகளின்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள். ஆஷஸ் தோல்வியால் அவ்விருவரையும் நீக்கிவிட்டு தற்காலிகப் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்டை ஈசிபி நியமிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவி பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.